சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது வெப்பநிலை உயர்ந்தும் காணப்பட்டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 9 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் கனமழையாக மாறியது.