மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் மாலை முதல் இரவு வரை 3 விமானங்களின் வருகை, 3 விமானங்களின் புறப்பாடு என 6 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. இவை நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், அதில் செல்லவேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் நேற்று மாலை 3 மணியளவில் கர்நாடகாவின் சிவமோகா செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம், இரவு 8.35 மணியளவில் கொச்சி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9 மணியளவில் கோழிக்கோடு செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களின் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், நேற்று மாலை முதல் இரவு வரை கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், கர்நாடகாவின் சிவமோகாவில் இருந்து சென்னை வரும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 3 விமானங்களின் வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் மாலை முதல் இரவு வரை 3 விமானங்களின் புறப்பாடு மற்றும் 3 விமானங்களின் வருகை என மொத்தம் 6 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், அதில் செல்லவேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மேற்கண்ட 6 விமானங்களின் சேவையும் நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து இவ்விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று தெரிவித்தனர்.
The post சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் 6 விமான சேவைகள் திடீர் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.