ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாகவே இன்றைக்கும் பார்க்கப்படுகின்றன. அதில் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை எம்ஜிஆர் போட்டியிட்ட அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் வசிக்கும் மக்கள் “இது எம்ஜிஆர் போட்டியிட்ட தொகுதி” என்று சொல்லிக் கொள்வதை இன்றைக்கும் பெருமையாக நினைக்கிறார்கள்.
இந்த மூன்று தொகுதிகளில் அருப்புக்கோட்டையையும் ஆண்டிபட்டியையும் இப்போது திமுக தன்வசமாக்கி வைத்திருக்கிறது. ஆனால், மதுரை மேற்கில் திமுக-வால் நீண்ட காலமாக கால்பதிக்க முடியவில்லை. 1977 முதல் இதுவரைக்கும் 7 முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறது அதிமுக. தொடர்ச்சியாக கடந்த மூன்று தேர்தல்களாக இங்கு வாகை சூடி வருகிறார் செல்லூர் ராஜூ. திமுக இங்கு 3 முறை மட்டுமே வென்றுள்ளது. சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எம்ஜிஆர், பொன்.முத்துராமலிங்கம், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், செல்லூர் ராஜு ஆகியோர் இங்கு நின்று வென்ற முக்கிய தலைவர்கள்.