சேலம்: தென்மேற்குப் பருவமழை கடந்த 3 மாதங்களில், இயல்பை விட குறைவாக, சேலம் மாவட்டத்தில் 19 சதவீதம், நாமக்கலில் 37 சதவீதம், ஈரோட்டில் 31 சதவீதம், தருமபுரியில் 27 சதவீதம், கிருஷ்ணகிரியில் 25 சதவீதம் என பற்றாக்குறையாக பெய்துள்ளது. எனவே, வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள், நீர்வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வழக்கமாக, ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையானது, நடப்பாண்டில் முன்கூட்டியே, அதாவது மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. செப்டம்பர் வரை இப்பருவமழைக் காலம் நீடிக்கும் என்றாலும், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பு அளவை விட குறைந்த அளவே மழை பெய்துள்ளது.