நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையில், கூடுதல் லக்கேஜ் எடுத்த செல்ல ஒன்றிய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை தொடங்கி யது. நேற்று (16ம் தேதி) 100வது நாள் ஆவதை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் செய்தனர். இரு நாட்டு பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். இலங்கைக்கு கப்பல் புறப்படுவதற்கு முன்பு துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவன குழுமத்தினருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொடியசைத்து வைத்து சிவகங்கை கப்பலை வழி அனுப்பி வைத்தனர்.
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பயணிகள் 10 கிலோ வரை லக்லேஜ் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது 22 கிலோ வரை கூடுதலாக லக்கேஜ் எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் கூறினர். பயணிகளுக்கு பாதுகாப்பு நிறைவாக உள்ள வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை இந்த பயணம் அள்ளித்தரும் என கேப்டன் ராஜாஜெகபர் கூறினார்.
The post சேவை தொடங்கி 100 நாட்கள் நிறைவு; நாகை-இலங்கை கப்பலில் கூடுதல் லக்கேஜிக்கு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.