புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில், மேற்குலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் உண்மையில் படையெடுப்பு என்பதை வெறும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றியுள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், “நாம் அனைவரும் இன்று இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம். இன்று இது முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காஷ்மீரை நீண்ட காலமாக மற்றொரு நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இப்பிரச்சினையில், நாம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றோம். ஆனால், அங்கு காஷ்மீர் மீதான படையெடுப்பு என்பது வெறும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டனர்.