ஒட்டவா: கனடாவில் கடந்த 2023ம் ஆண்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய கனடா பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி இந்தியாவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. இதனால், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்க உள்ள ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறியும் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுள்ளார்.
இந்நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியை அழைத்தது ஏன் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த பிரதமர் கார்னி, ‘‘இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. உலகளாவிய விநியோக சங்கிலி பலவற்றிலும் இந்தியா மையமாக உள்ளது. இதனால் ஜி7 மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால் அழைப்பு விடுத்தோம்’’ என்றார்.
* காங்கிரஸ் கிண்டல்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு, கடந்த மே 24ம் தேதி நிதி ஆயோக் சிஇஓ அளித்த பேட்டியில், இந்தியா, ஜப்பானை முந்தி 3வது பெரிய பொருளாதார நாடாகி விட்டதாக கூறினார். ஆனால், மிகச்சிறந்த பொருளாதார நிபுணரும், கனடாவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான கனடா பிரதமர் கார்னி இன்னும் 5வது பெரிய பொருளாதாரம் என குறிப்பிடுகிறார். அவரை பிரதமர் மோடி சந்திக்கும் போது இதைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்’’ என கிண்டலடித்துள்ளார்.
The post ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்தது ஏன்? கனடா பிரதமர் விளக்கம் appeared first on Dinakaran.