சென்னை: முந்தைய கல்வி ஆண்டைவிட இந்த கல்வி ஆண்டில் அதிக தேர்ச்சியை மாணவர்கள் பெறும் வகையில் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பங்கேற்றனர். அப்போது பள்ளிகள் திறப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பள்ளிகளில் படித்து வந்த மாணவ மாணவியரில் இடைநின்றவர்களை கண்காணித்து, இடைநிற்றல் இருந்தால் அவர்்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வர வேண்டும். மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
முந்தைய கல்வி ஆண்டைவிட இந்த கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பதிசோதிக்க வேண்டும். மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனை மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
The post ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு அதிக தேர்ச்சிக்கு முயற்சிக்க அமைச்சர் அறிவுரை appeared first on Dinakaran.