கோவை: செங்கோட்டையன் நல்ல நண்பர், அவர் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கின்றார், அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவது குறித்த கேட்கப்பட்டது, அது பற்றி முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பதிலளித்தார்.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கோவையில் முகாமிட்டுள்ள நிலையில் அவரை சந்தித்தீர்களா? அல்லது சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ஒன்றிய அமைச்சரை சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை, பிரிந்து கிடக்கின்ற அதிமுகவைச் சேர்ந்த சக்திகள் ஒன்று இணைய வேண்டும் என்றுதான் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இருந்து சொல்லி வருகிறார். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஓன்றிணைய வேண்டும்.
எனது தரப்பில் இருந்து அதிமுகவை இணைக்க தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடுநிலையாளர்கள் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நல்ல நண்பர். அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
The post ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும்: கோவையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.