மாஸ்கோ: தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்" என்றார். முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தது கவனிக்கத்தகக்து. கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ஒரு இறையான்மை கொண்ட நாடாக, நாங்கள் பங்கு பெறாத பேச்சுவார்தையில் எட்டப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்திருந்தார்.