மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதற்கு திமுக, பாஜக, அதிமுக என போட்டிபோட்டு பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், “நான் முதல்வராக இருக்கும் வரை இந்தத் திட்டத்தை வரவிடமாட்டேன்” என அறிவித்தார். அதிமுக-வும் இந்தத் திட்டத்துக்கு எதிராக பேரவையில் குரல் கொடுத்தது. களத்துக்கு வந்து மக்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கும்” என, உறுதியளித்தார்.
இந்நிலையில் ஜனவரி 21-ம் தேதி, அண்ணாமலை மற்றும் மாநில பாஜக பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையிலான பாஜக-வினர் விவசாயிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகே திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.