மதுக்கடையை மையமாக வைத்து தமிழ்நாட்டுக்குள் அடுத்ததாக ஓர் அரசியல் யுத்தம் தொடங்கியிருக்கிறது. ஒருபக்கம் அரசாங்கத்தின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்த, அதை வைத்து தீப்பொறி பறக்க அறிக்கைகள் விட ஆரம்பித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆளும் திமுக அரசை நோக்கிய அவரது குற்றச்சாட்டுகளை, கடுமையான பதில் குற்றச்சாட்டுகளால் துளைக்கத் தொடங்கியது எதிர்தரப்பு.
போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று தமிழக இளைஞர்களை வேண்டிக் கேட்டுக்கொண்ட முதல்வரின் விளம்பரத்தையே போராட்ட ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியது பாஜக. அக்கட்சியின் மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று முதல்வரின் படத்தை அங்கெல்லாம் ஒட்டி, முதல்வர் சொன்ன வாசகத்தையும் அதில் வைத்து ஏகடிய வியூகம் வகுக்கத் தொடங்கியதில் மிகவும் கொதித்துப் போனது திமுக தரப்பு.