சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதேபோன்று சோதனை நடத்தியது.
மாவட்ட கலெக்டர்களுக்கும் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்றுதான் சோதனை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு அறிவுறுத்தினர்.
அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். தகவல் மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்தனர்.
இது அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒட்டுமொத்த அலுவலகத்தையும் 3 நாட்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? இந்த 3 நாட்கள் நடந்த சோதனையின்போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளதா? அலுவலகத்துக்குள் நோட்டீஸ் இல்லாமல் ஏன் திடீரென்று சோதனை நடத்தினீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என்றார்.
அப்போது நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றம் எப்போது சோதனை செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரவில் சோதனை செய்ய முடியாது. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதற்காக 3 நாட்கள் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் வெளியில் விடவில்லை. விரிவான பதில் மனுவை வருகிற திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். அப்போது அட்வகேட் ஜெனரல், எங்களிடம் கண்காணிப்பு கேமரா பதிவு முழுவதும் உள்ளது. பெண் அதிகாரிகளை காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர்.
அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்றார். இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது? என்று கேட்டனர். இதை மறுத்த ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை.
அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று விளக்கமளித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது. அமலாக்க துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தைத்தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி இந்த வழக்கில் அமலாக்க துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதுவரை அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். சிசிடிவி பதிவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* பெண் அதிகாரிகளை காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
* தகவல் மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சந்தேகப்படுவதற்கு காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
The post டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய விவகாரம் அமலாக்க துறை நடவடிக்கைக்கு தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.