அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 10-ம் தேதி திறந்துவைக்கிறார்.
அதிமுக கட்சிக்கென ஒரு அலுவலகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கு தேவையான இடம் கோரி மத்திய அரசிடமும் விண்ணப்பித்திருந்தார். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு மத்திய நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம், அதிமுகவுக்கு, புதுடெல்லியில் உள்ள சாகேத் பகுதியில், எம்.பி. சாலையில் 1,008 சதுர மீட்டர் கொண்ட நிலத்தை ஒதுக்கியது. இதற்காக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.22.46 லட்சத்தையும் அதிமுக செலுத்தி இருந்தது. இந்த இடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில், வரும் 10-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.