டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில் டெல்லி அணியின் கேப்டன் மட்டுமே கடைசியாக அறிவிக்கப்பட்டார். ரிஷப் பந்த், லக்னோ அணிக்கு மாறியுள்ளதால் கேப்டனாக அக்சர் படேல் எப்படி செயல்பட போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வலுவான போட்டியாக திகழும் டெல்லி அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2020-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து முதன்முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்த ஆண்டில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய டெல்லி அணி கடந்த 3 சீசன்களிலும் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இம்முறை கே.எல்.ராகுல், டு பிளெஸ்ஸிஸ் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர்கள். இவர்களுடன் கருண் நாயரும், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.