புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரிவிதிப்பு மீதான தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடைமுறை தொடரும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இந்தியா, சீனா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அவர் அறிவித்தார். புதிய வரிவிதிப்பை எதிர்த்து அமெரிக்காவின் குறு, சிறு நிறுவனங்கள் சார்பில் நியூயார்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக ஜனநாயக கட்சிகள் ஆட்சி நடத்தும் மாகாணங்களின் அரசுகள் சார்பிலும் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.