தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரி, சிமென்ட் குடோன்களுக்கு மத்தியில் பழைய கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள இக்கல்லூரிக்கு விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், உயர் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியானதையடுத்து, 2022-ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி அருகே மோசஸ்புரம் என்ற இடத்தில் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.