வல்லம்: தஞ்சை அடுத்த ராமநாதபுரம் திரவுபதை அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 800 காளைகள், 420 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சை ஆர்டிஓ இலக்கியா கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், செல்போன், எவர்சில்வர் பாத்திரம் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கொன்னையம்பட்டி அக்காண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. 800 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி கொடியசைத்து துவக்கி வைத்தார். இங்கு கட்டில், பீரோ, மிக்சி, எவர்சில்வர் பாத்திரம், ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தஞ்சை, பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு 1,600 காளைகள் சீறிப்பாய்ந்தன: 720 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் appeared first on Dinakaran.