மதுரை: ரவுடி வெள்ளைக்காளியை விசாரணைக்கு அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதால் அவரிடம் காணொலி காட்சி வழியாக விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
திருச்சி குண்டூரைச் சேர்ந்த சத்யஜோதி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது சகோதரர் வெள்ளைக்காளி என்ற காளிமுத்து 2019 ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். மதுரையில் கடந்த மாதம் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் வெள்ளைக்காளிக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் காளி கொலை வழக்கில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வெள்ளைக்காளியையும் சேர்த்துள்ளனர். வெள்ளைக்காளி சிறையில் இருக்கும் நிலையில், அவர் மீது ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பல வழக்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.