
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த இக்கட்டான நேரத்தில் பசும்பொன் தேவருக்கு ராஜாஜி ஆதரவாக இருந்தார். இப்படியான சூழலில் 1957-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தது. இந்தத் தேர்தலில் திமுகவினர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். அப்போது அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
அந்தச் சின்னம் இதற்கு முன், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியிடம் இருந்தது. அவர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாவுக்கு உதயசூரியன் சின்னம் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. நாள் விடியும்போது உதயசூரியன்தானே தன் ஒளிக் கற்றைகளை பரவச் செய்கிறான். எனவே இந்த நாடு விடியல் பெற உதயசூரியன் சின்னம்தான் பொருத்தமாக இருக்கும் என்று அண்ணா கருதினார். அதன் பின்னர் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் 1.03.1958 அன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இதற்கு முன்னதாகவே கலைஞர் எழுதிய ‘உதயசூரியன்’ எனும் நாடகம் தமிழ்நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனால் ‘உதயசூரியன்’ சின்னம் மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

