ராமேசுவரம்: தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இந்தத் தடை ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.