திருச்சி: தமிழகத்துக்கு நிபந்தனையின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்கினார். திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் சார்பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது: சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, 2024-25-ம் நிதியாண்டுக்கு நிலுவையில் உள்ள ரூ.2,151.59 கோடியையும், 2025-26-ம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும், பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்காமல் விரைந்து வழங்க வேண்டும்.