சென்னை: “நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் தாமேந்திர பிரதான் முறையான பதில் அளிக்காமல் தமிழர்களையும், தமிழகத்தையும் இழிவுபடுத்தி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பல நேரங்களில் தமிழ் மக்களையும், தமிழகத்தையும் சிறுமைப்படுத்தி வருகிறார். இந்தச் செயல் தொடருமானால் தமிழகம் அமைதி கொள்ளாது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழகம் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மத்திய அரசும், கல்வி அமைச்சகமும் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறைக்கு, சட்டபூர்வமாக வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.