தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.25-ம் தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்திருந்தது.