தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக (ரூ.88 லட்சம் கோடி) உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இந்த பொருளாதார ஆய்வறிக்கை.