சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகளை 90 கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நமது கலைஞர்கள் இங்கு மட்டுமின்றி,உலகம் முழுவதும் சென்று தமிழ்க் கலைகளை பரப்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கான பாரதியார் விருதை (இயல்) ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை (இசை) கே.ஜே.யேசுதாஸுக்கும், பாலசரஸ்வதி விருதை (நாட்டியம்) முத்துகண்ணம்மாளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். யேசுதாஸ் சார்பில் அவரது மகன் விஜய் யேசுதாஸ், விருதை பெற்றுக் கொண்டார்.