சென்னை: தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்பால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காணவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எந்தெந்த பிரச்னைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பாஜவின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்னையைக் கையில் எடுத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வரின் அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
* தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர்.
* நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10ம் நாள் (இன்று) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* மாநிலங்களுக்கு செல்லும் அமைச்சர்கள், எம்பிக்கள் குழு…
அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர்.
The post தமிழ்நாட்டின் எம்.பி தொகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.