சென்னை: தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு UPSC முதல்நிலை தேர்வு எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தியறிந்து மகிழ்ந்தோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு UPSC முதல்நிலை தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதில் மகிழ்ச்சியும் – பெருமையும் கொள்கிறோம். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் மூலம், மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற்ற 315 மாணவர்கள், இந்தாண்டு Prelims தேர்வில் வென்று காட்டி இருக்கிறார்கள்.
கடந்தாண்டு, நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற 276 பேர் Prelims-இல் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு அதைவிட கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் வென்றிருப்பதே, நான் முதல்வன் திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி. இத்தேர்வர்களுக்கு, Prelims-ஐ தொடர்ந்து, Mains தேர்வுக்கு தயாராக தலா ரூ.25,000, நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது, தலா ரூ.50,000 என நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசுப்பணியை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ள நம் மாணவர்கள், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்வுகளிலும் வெற்றி பெற்றிட அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். IAS, IPS போன்ற அவர்களின் ஒன்றிய அரசுப்பணி எனும் கனவு நனவாக நான் முதல்வன் என்றும் துணை நிற்கும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு UPSC முதல்நிலை தேர்வு எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தியறிந்து மகிழ்ந்தோம்: துணை முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.