சென்னை: தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் தர்பூசணி பழங்கள் அதிகமாக விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு தர்பூசணியில் ஊசி மூலம் நிறமேற்றப்படுவதாக சமீபத்தில் பரவிய தகவல்களால் தர்பூசணி விற்பனை சரிந்துள்ளது. இந்த ஆண்டு மக்களிடையே தர்பூசணி நுகர்வு பாதியாக குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தவறான தகவலை பரப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தர்பூசணி பழங்களை அரசாங்கமே கொள்முதல் செய்து அதற்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
The post தர்பூசணி பழம் சர்ச்சை.. எந்த ரசாயனமும் இல்லை செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!! appeared first on Dinakaran.