வேலூர்: திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு ‘அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் -08) தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் அமைச்சர்கள் கடனுதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டம் ஜாப்ராபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.