சென்னை: “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடந்த தாதுமணல் கொள்ளை வழக்கு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு மற்றும் வழக்கறிஞர் வி. சுரேஷ் ஆகியோர் சமர்ப்பித்த அனைத்து அறிக்கைகளையும் உயர் நீதிமன்ற அமர்வு செல்லத்தக்கதாக அறிவித்திருக்கிறது. எனவே, தமிழக அரசு இந்த அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன் இது தொடர்பான சிறப்பு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும்.