சத்தியமங்கலம்: தாளவாடி அருகே விவசாய தோட்டத்திற்குள் மக்காச்சோளத்தை சாப்பிட காட்டு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குருசாமி. இவர், தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து காய வைப்பதற்காக வீட்டின் முன்பு குவித்து வைத்திருந்தார்.
நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை மக்காச்சோள வாசனையை நுகர்ந்தபடி தோட்டத்திற்குள் நுழைந்தது. வீட்டின் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டது. அப்போது, வீட்டில் இருந்த குருசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டு யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர். ஆனால் காட்டு யானை அங்கிருந்து நகராமல் நீண்ட நேரம் நின்றது. பின்னர், சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாளவாடி அருகே தோட்டத்திற்குள் மக்காச்சோளம் ருசிக்க வந்த காட்டு யானை: நீண்ட நேரம் நின்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.