தூத்துக்குடி கோரல் மில், விக்கிரமசிங்கபுரம் ஆலை வேலை நிறுத்தம் போன்ற நிகழ்வுகள் நெல்லை மண்ணில் பொதுவுடைமைக் கொள்கைக்கு வித்திட்டன. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரியும் பொதுவுடைமை கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தொடக்கத்தில் பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, தூத்துக்குடி வி.,சங்கரநாராயணன், சிந்துபூந்துறை சோ.சண்முகம் பொதுவுடைமைக் கொள்கைக்கு இங்கு அடித்தளம் போட்டவர்களாவார்கள்.
இவர்களுடன் ஆர்.நல்லகண்ணு, ஏ.நல்லசிவன், சு.பாலவிநாயகம், தொ.மு.சி.ரகுநாதன், வி.மீனாட்சிநாதன், சாத்தான்குளம் ராகவன், கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகர்சாமி, டி.ஜி.சுப்பிரமணியன், கழுகுமலை கே.அழகிரி, கோடங்கால் கே.கிருஷ்ணசாமி, தி.க.சி., இலஞ்சி ஐ.வி.ராமகிருஷ்ணன், பூதலப்பபுரம் ஆர்.வேலுசாமி தேவர், பி.பாவநாசம், கடையநல்லூர் ஆர்.ஏ.சக்கையா, எம்.பாண்டியன், பி.சாமிநாதன், சொக்கலிங்கம் பிள்ளை, ஆர்.வி.ஆனந்த கிருஷ்ணன், உடன்குடி பூவலிங்கம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.முருகானந்தம், செங்கோட்டை காமாட்சி, பெ.சீனிவாசன், சொர்ணம் டி.கே.சுவாமிதாஸ், சிவகிரி செல்லையா, எஸ்.எஸ்.தியாகராஜன், சம்பத் போன்ற எண்ணற்றோர் இந்த மண்ணில் பொதுவுடைமை இயக்கம் வளரத் தங்களையே அர்ப்பணித்தனர். ப.மாணிக்கம் பொறுப்பு எடுத்து இப்பகுதியில் கட்சிப் பணியாற்றினார்.
எஸ்.வி.காட்டே, ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், கே.அனந்த நம்பியார், ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன், ஐ.மாயாண்டி பாரதி போன்ற தலைவர்கள் நெல்லைக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கம் வளரப் பாடுபட்டனர்.