மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றும் அர்ஜுனும் (கிஷண் தாஸ்), தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீராவும் (ஸ்மிருதி வெங்கட்) காதலிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், மீராவின் வீட்டில் ரோகித் என்பவர் இறந்து கிடக்கிறார். அங்கே வரும் அர்ஜுன், அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாண்டார்? ரோகித் யார்? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரித்துச் சொல்கிறது கதை.
ஒரு விபத்து கொலையாகத் தெரியலாம். அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கொலையை விபத்துபோல் சோடனைச் செய்யலாம். ஆனால் அதிலிருக்கும் உண்மையைக் கூர்ந்து நோக்கி வெளிக்கொணரும் நேர்கொண்ட பார்வையே சட்டத்தின் கண்களுக்கு ஒளியைப் பாய்ச்சுகிறது. ஆனால், இந்தக் கதையில், சட்டத்தின் கண்களை மறைக்க, நாயகன் ஆடும் ஆட்டத்தைப் பதற்றத்துடன் காண வைக்கிறது திரைக்கதை.