நேர்மைக்குப் பெயர்பெற்ற சார்பதிவாளர் தசரத ராமன் (சமுத்திரக்கனி). தந்தையின் குணத்துக்கு நேர்மாறாக தீயவனாக வளருகிறான் மகன் ராகவன் (தன்ராஜ்). இதனால் தந்தை- மகன் உறவு முட்டல் மோதலாகவே தொடர்கிறது. ஒரு கட்டத்தில் கைமீறிப்போகும் மகனின் விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றத் தயாராகிறார் அப்பா. அது என்ன? மகன் மாறினானா, இல்லையா என்பது கதை.
குழந்தை வளர்ப்பில் எங்கோ ஓரிடத்தில் நேரும் சிக்கல், பிள்ளைகளை எந்த எல்லைக்கும் இழுத்துக்கொண்டுபோகும் என்பதற்கு ராகவன் கதாபாத்திரம் எடுத்துக்காட்டு. அதேபோல், பிள்ளைகள் நலனுக்காக உயிரைக்கூட இழக்கத் துணியலாம் என்கிற பாசத்துக்கு எடுத்துக்காட்டு, ராமன். இந்த முரண்பாடான கலவையில், வழிதவறிப் போன மகனை மீட்பதற்கான சாமானிய தந்தையின் போராட்டமாக விரியும் திரைக்கதையில் நிறைந்துள்ள வலுவான காட்சிகள் ஆரம்பம் முதலே நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.