அஜர்பைஜானில் வசிக்கும் அர்ஜுனை (அஜித் குமார்) பிரிய நினைக்கும் அவர் மனைவி கயல் (த்ரிஷா), மற்றொரு நகரத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார். கடைசிப் பயணமாக, தானே காரில் கொண்டு சென்று விடுகிறேன் என்கிறார் அர்ஜுன். இருவரும் செல்கிறார்கள். வழியில் இருக்கும் பெட்ரோல் பங்கில்தமிழர்களான ரக்‌ஷித்தையும் (அர்ஜுன் சர்ஜா), தீபிகாவையும் (ரெஜினா கசாண்ட்ரா) சந்திக்கிறார் கயல். இதற்கிடையில் அர்ஜுனின் கார் பிரச்சினை செய்ய, ரக்‌ஷித், தீபிகா வரும் டிரெக்கில் கயலை அனுப்பி, 40 கி.மீ தொலைவில் இருக்கும் தாபாவில் இறக்கி விடச் சொல்கிறார், அர்ஜுன். பிறகு கார் சரியாகி, அந்த தாபாவுக்கு அவர் வந்தால், கயல் கடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. கயலைக் கடத்தியவர்கள் யார், அவரை அர்ஜுன் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது படம்.
‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படப் பாதிப்பில் உருவாகியிருக்கும் கதைதான். காணாமல் போன மனைவியைத் தேடும் கணவன் என்கிற ஒன் லைனுக்குள் பெரிய குற்றச் சம்பவத்தை வெளிப்படுத்தும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை என்றாலும் அதிரடியான மசாலாக்களையும் அஜித்குமாரின் நட்சத்திர அந்தஸ்தையும் ஓரங்கட்டி வைத்திருக்கிறது படம்.