சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி, இன்று தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்கு மாவட்டங்களில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மாவீரன் தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று!
அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை!
அவர் வீரமும் புகழும் வாழ்க!. இவ்வாறு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
The post தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று.. அன்றே அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வுக்கு வித்திட்ட வீரர்; அவர் வீரமும் புகழும் வாழ்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!! appeared first on Dinakaran.