இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் மிக முக்கியமானவர் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரி (1878-1972). அவரின் முழு வாழ்க்கையையும் அறியாதவர்கள், அவர் ஒரு பார்ப்பனியவாதி என்று தவறாக கருதுகின்றனர். சேலத்தில் பின்னர் சென்னையில் மிக மிக வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தவர். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வழக்கு கட்டணமாக 1910-இல் ஈட்டியவர் (இன்றைய மதிப்பில் சுமார் 2 லட்சம்). அவர் விரும்பியிருந்தால், மிகப் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்க முடியும்.
1917-இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரவுலட் சட்டத்துக்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1920-இல் காந்தியடிகளின், ஒத்துழையாமை போராட்டத்திற்கான அறைக்கூவலை ஏற்று வழக்கறிஞர் தொழிலை துறந்தார். (அதன் பிறகு அவருக்கு நிரந்தர வருமானம் எதுவும் இல்லை.).