சென்னை: சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப்பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. வீரதீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தின விழாவில், கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளதால், விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லா விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ்-2, ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். பக்க எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை, விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள், இணைப்பு – படிவம் 1 மற்றும் 2, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம் மற்றும் படிவம் 1 மற்றும் 2 முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
The post துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.