சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ளும் மகத்தான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் சென்று பெற்றுவந்த முதல்வருக்கு மே 3-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த துறைக்கு சுமார் ரூ.37 ஆயிரம் கோடி நிதிதான் ஒதுக்கப்பட்டது.