தூத்துக்குடி: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பேட்டரி கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கட்டுமானப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வரும் வின்பாஸ்ட் பேட்டரி கார் உற்பத்தி நிறுவனம் 90% பணிகளை முடித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை வரும் ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் என்று அதன் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி பாம்சாவ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி உற்பத்தியையும் தொடங்கி இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைத்து உள்நாட்டு சந்தையை பிடிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரி கார்கள் இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், தற்போது பேட்டரி கார்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இரு சீன கார்களுக்கு இந்த வின்பாஸ்ட் நிறுவனம் போட்டியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பேட்டரி கார்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வருவாயும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் தொழிற்சாலையில் ஜூனில் கார் உற்பத்தி துவங்கும் appeared first on Dinakaran.