புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்’ என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உட்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘அதிகாரிகளின் சொத்து விவரங்களை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் அருணா ஜெகதீசன் கமிட்டி அமைக்கப்பட்டதால் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை கைவிட்டது. எனவே இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது’ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின்னர் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அப்போது இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடருமா அல்லத் ரத்து செய்ய வேண்டுமா என்று குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். அதுவரையில் தற்போதைய நிலையே தொடரும்’ என்று உத்தரவிட்டனர்.
The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் வாதம் appeared first on Dinakaran.