சென்னை: அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்லூரியில் தூய்மைப் பணியாளரின் நியமனத்துக்கு சம்மதம் தெரிவிக்காத தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.