தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது தென்காசி மாவட்டம். மாவட்டத்தில் பரவலாக காய்கறி வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்கின்றனர்.