திருச்சி/ கும்பகோணம்: இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், நம் நாட்டிலிருந்து ஏராளமான வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர். அவர்களில், முக்கியமானவர், தென்னகத்தின் நீர் மேலாண்மையை மேம்படுத்தியவரும், கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தானின் புகழை உலகுக்கு உரக்கச் சொன்னவருமான சர் ஆர்தர் தாமஸ் காட்டன்.
இவர், 1803-ம் ஆண்டு மே 15-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு, 10-வது மகனாக பிறந்தவர். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821-ல் சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர், 1822-ல் ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்.