சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய் கடி சம்பவம் தொடர்பாகவும், நாய் கடித்து மரணம் அடையும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே சி கருப்பண்ணன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “சமீப காலங்களில் தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து மரணம் அடையும் கால்நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிகளின் படி உரிய இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாடு இறந்தால் 37500, ஆடு 6 ஆயிரம், கோழி 200 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்க 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக நேற்று முன் தினமே உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
வெறிநாய்களை பிடித்து அவற்றிற்கு ஊசி செலுத்தி குணமடைந்த பின் மீண்டும் விட்டுவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றால் தான் தீர்வு கிடைக்கும், இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
The post தெரு நாய்கள் கடித்து மரணம் அடையும் கால் நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.