சென்னை: தமாகா சார்பில் தேர்தல் ஆலோசனை குறித்த கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், பி.ஜவஹர் பாபு, திருவேங்கடம், நம்பி, ராணி கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் முனவர் பாஷா, சக்தி வடிவேல் ராணிகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் வேளச்சேரி கே.பி.லூயிஸ், பிஜு சாக்கோ, கோவிந்தசாமி, மலையூர் புருசோத்தமன், பத்மநாபன், மகளிர் அணி நிர்வாகிகள் கல்யாணி, நந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாஜ, அதிமுக, தமாகா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய், நீட் தேர்வு குறித்து சரியான அறிவுரையை வழங்கியுள்ளார். நீட் தேர்வில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என்று கேட்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பது எனது கருத்து. ஆட்சி மாற்றம் தேவை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, வைராக்கியமாக உள்ள தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். மத்தியில் பாஜ, தமிழகத்தில் அதிமுக என்பதுதான் தமாகா நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.
The post தே.ஜ.கூட்டணியில் தவெக இணையுமா? ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.