திண்டிவனம் / சென்னை: மதுரைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ள நிலையில், தைலாபுரத்தில் கடந்த 22 நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னைக்கு இன்று (ஜூன் 7) காலை பயணித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மகள் வழி பேரன் ‘முகுந்தனுக்கு அரசியல் பட்டாபிஷேகம்’ செய்து வைத்த தனது தந்தையான பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே மோதல், ‘விரிசல்’ உருவானது. சென்னைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டணியை இறுதி செய்ய முடிவெடுத்த அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ஒருநாள் முன்னதாக ராமதாஸ் அறிவித்தார். இதனால் கூட்டணி இறுதியாகவில்லை.