புதுடெல்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாராக இல்லை என்று மக்களவை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக #FairDelimitation என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்தனர். மேலும் அதில், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்பதைக் குறிக்கும் ‘Tamil Nadu will fight, Tamil Nadu will win’ எனும் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.