சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அமைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை கிண்டியில் உள்ளநட்சத்திர ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.